தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பினை கட்டி காப்பாற்ற வேண்டிய தேவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளாதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டுகோப்பாக வைத்திருக்கவேண்டிய தேவை ரணில் விக்ரமசிங்கவிற்கு இருப்பதனை தற்போது உணரக்கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கருத்து முரண்பாடு காரணமாக தேர்தலுக்கு பின்பு தேசிய அரசாங்கத்தில் உடைவு ஏற்படுமாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சி தனித்து நின்று ஆட்சி அமைப்பதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
அப்படி ஒரு தேவை ஏற்படும் பட்சத்தில் தாங்கள் முழுமையான ஆதரவு கொடுப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சியினுடைய பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள சுரேஸ் பிரேமசந்திரன் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக என்ன விடயத்தையும் செய்யும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.