ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இதனால் பயணிகளும் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இன்று முற்பகல் சேவைக்கு சமூகமளிக்காவிடின், சேவையிலிருந்து விலகிச் சென்றவர்களாக அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 8 தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜி எஸ் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொடர்ச்சியாக பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை பணிபகிஷ்கரிப்பு தொடரும் என சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த கூட்டத்தில் தமது கோரிக்கைக்கான நியாயமான தீர்வு பெற்றுத்தரும் பட்சத்தில் பணிபகிஷ்கரிப்பை கைவிடுவதற்கு தயராகவுள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகளின் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.