ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு இன்று கூடியது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹஜன எக்சத் பெரமுன, தேச விமுக்தி ஜனதாக் கட்சி, ஶ்ரீ லங்கா மஹசனக் கட்சி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தன.
இதனைத் தவிர ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதற்கு விரும்பினால் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகள் என்ற வகையில், இன்றைய கூட்டத்தில் தாம் பங்கேற்றதாகவும் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.