728x90 AdSpace

  • Latest News

    இலங்கை ஒலுவில் துறைமுகம்: மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக போராட்டம்


    இலங்கையின் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து, ஒலுவில் பிரதேச மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

    ஒலுவில் துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் தங்கியிருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
    ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலுள்ள படகுகள் பயணிக்கும் வழியை மணல் மூடியுள்ளது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.
    கடந்த வாரம் ஒலுவிலுக்கு வந்திருந்த துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்ற வாக்குறுதியளித்தார்.
    இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து, தமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடல் அரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு வழி செய்யாமல், மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என ஒலுவில் பிரதேச மக்கள் அமைதிப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

    ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர்தான், தங்களது பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக, ஒலுவில் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
    ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் பல நூறு மீட்டர் நிலப்பரப்பில் கடல் நீர் புகுந்துள்ளதாகவும், அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன என்றும், ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல். ஹைதர் தமிழோசைக்கு கூறினார்.
    ஒலுவில் பிரதேசத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கடலுக்குள்ளும், கரைப்பகுதியிலும் பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ள போதிலும், கடல் அரிப்பின் தீவிரம் குறையவில்லை.
    ஒலுவில் மட்டுமன்றி அதற்கு பக்கத்திலுள்ள நிந்தவூர் உள்ளிட்ட வேறு சில பிரதேசங்களும், இவ்வாறான தீவிர கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
    இதேவேளை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை விட்டுள்ள மீனவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீன்பிடித் துறைமுகத்தில் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றி, மீன்பிடித்தொழிலை தொடர அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இந்த மீனவர்கள் கோருகின்றனர்.
    (தகவல் - அஜிவத் ஷாஜஹான்.                                                     தமிழோசை அம்பாறை செய்தியாளர்)  
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இலங்கை ஒலுவில் துறைமுகம்: மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக போராட்டம் Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top