இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தமை, அதனை தொடர்ந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அதில் பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளடங்கலாக, 15 பேர் எதிர்த்தரப்புக்கு சென்றமை ஆகிய நிலைமைகளால் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்யவே இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.
இதனை ஒரு விஞ்ஞான ரீதியிலான அமைச்சரவை மாற்றம் என்று ஜனாதிபதி வர்ணித்திருந்தார். ஆனாலும், இது குறித்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் ஆய்வாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் காணப்படுகின்றன.
கூட்டணி அரசாங்கம் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிக்கட்டவும், அமைச்சரவையில் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பவுமே இந்த மாற்றங்களை செய்தது என்று பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
அமைச்சுக்களுக்கான பொறுப்புக்களை முறையான அடிப்படையில் பகிர்வதற்கான முயற்சியே இந்த அமைச்சரவை மாற்றம் என்கிறார் கொழும்பில் வாழும் இந்திய செய்தியாளரும், இலங்கை அரசியலை நீண்டகாலமாக ஆராய்ந்து வருபவருமான பி.கே. பாலச்சந்திரன்.
எடுத்துக்காட்டாக, ஏற்கனவே தேசிய சகவாழ்வு அமைச்சகத்தை தன்வசம் வைத்திருந்த மனோ கணேசனுக்கு நல்லிணக்க அமைச்சு வழங்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தேசிய சகவாழ்வு அமைச்சின் மூலம் தான் ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்டதை உணர்ந்தே தனக்கு, தன்வசம் இருந்த நல்லிணக்க அமைச்சகத்தை ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாக மனோ கணேசனும் பிபிசிக்கு கூறினார்.
போருக்கு பின், இலங்கையில் தேசிய நல்லிணக்கம் என்பது முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. இனங்களுக்கிடையிலான முரண்பாடு களையப்பட வேண்டும் என்பது இங்கு ஓர் ஏக்கமாகவே காணப்படுகின்றது.
ஏற்கனவே தன் வசமுள்ள அரசகரும மொழிகள் அமைச்சின் மூலம் மொழிச் சட்டங்களை அமல்படுத்த தான் நிறையச் செய்துள்ளதாகக் கூறும் மனோ கணேசன், இதே மாதிரி அடுத்து வரப்போகும் இரு வருடங்களில் நல்லிணக்கத்துக்கு நிறையச் செய்வேன் என்று உறுதி கூறுகிறார்.