இந்திய, இல ங்கை நீண்டகால நட்புறவை பலப்படுத்தும் வகையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டிற்கு வழங்கப்பட்ட “சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையின் இரண்டாவது கட்டம் நாளை (03) அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
209 புதிய அம்பியூலன்ஸ் வண்டிகளும், தேசிய அளவில் சுவசெரிய இயக்க மத்திய நிலைய நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுவசெரிய பணியாளர் குழுவுக்கு தேவையான பயிற்சி மற்றும் செலவுக்கான நிதியும் கிடைக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா கூறினார்.
முதலாம் கட்டத்தில் கிடைத்த 88 அம்பியூலன்ஸ் வண்டிகளில் 56 மேல் மாகாண மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்பட்டது. அதில் அம்பியூலன்ஸ் வண்டிகளில் 22 கொழும்பு மாவட்டத்துக்கும், கம்பஹா மற்றும் களுத்துறைக்கு 17 வண்டிகள் வீதம் பெற்றுக்கொடுக்கப்பட்டன. ஏனைய 32 அம்பியூலன்ஸ்களும் தென் மாகாணம் காலிக்கு 14 ம், மாத்தறைக்கு 12ம் ஹம்பாந்தோட்டைக்கு 06 வழங்கப்பட்டதாக பிரதியமைச்சர் கூறினார்.
இந்த அம்பியூலன்ஸ் சேவை 2016 ஆம் ஆண்டு 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு அன்று தொடக்கம் இன்று வரை 56,000 பேர் இச் சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளதாக சுவசெரிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் கயான் சதுரங்க கூறினார்.
நாளொன்றுக்கு கிட்டத்தட்ட சுமார் 150 பேர் வரை இச் சேவையை பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையில் கடமையாற்றும் குழுவில் அவசர வைத்திய தொழில்நுட்ப அதிகாரி ஒருவரும், சாரதியும் பயிற்சி அளிக்கப்படுகின்றார்கள். தற்போது இச் சேவையின் பணியாளர் குழுவில் 900 பேர் பணியாற்றுகின்றார்கள். நாடு பூராவும் இச்சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக இதில் கடமையாற்றுபவர்களின் எண்ணிக்கை 2000 க்கும் அதிகமாக அதிகரிக்குமென கயான் சதுரங்க கூறினார்.
இரண்டு மாகாணங்களில் மாத்திரம் செயல்படுத்தப்பட்ட இந்த அவசர அம்பியூலன்ஸ் சேவையை ஏனைய ஏழு மாகாணங்களிலும் செயல்படுத்த தேவையான வசதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தலைமையில் நாளை நடைபெறும் நிகழ்வில் ஒப்புதல் அளிக்க உள்ளார்.