வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று 43ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மன்னார், பழைய ''சதொச'' கட்டடம் இருந்த இடத்தில் மனித புதைகுழியொன்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் இந்த இடத்தில் அகழ்வுகள் நடந்து வருகின்றன.
இரண்டு மனித எச்சங்களைச் சூழ்ந்திருந்த களிமண்கள் அகற்றப்பட்டு, முதிர்ந்த மனித எச்சமும், அதன் அருகே சிறிய எலும்புகளைக் கொண்ட மனித எச்சமும் இன்று மீட்கப்பட்டன. இந்த எலும்புக் கூடுகள் ஒரு தாயினதும், பச்சிளம் குழந்தையினதுமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ள போதிலும், அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது என விசாரணைகளை நடத்திவரும் விசேட நீதிமன்ற சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று வரை மன்னார் மனித புதை குழியென கருதப்படும் இந்த இடத்தில் இருந்து 60 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.